திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.66 திருவேட்டக்குடி பண் - பஞ்சமம் |
வண்டிரைக்கும் மலர்க்கொன்றை விரிசடைமேல் வரியரவங்
கண்டிரைக்கும் பிறைச்சென்னிக் காபாலி கனைகழல்கள்
தொண்டிரைத்துத் தொழுதிறைஞ்சத் துளங்கொளிநீர்ச் சுடர்ப்பவளந்
தெண்டிரைக்கள் கொணர்ந்தெறியுந் திருவேட்டக் குடியாரே.
|
1 |
பாய்திமிலர் வலையோடு மீன்வாரிப் பயின்றெங்குங்
காசினியிற் கொணர்ந்தட்டுங் கைதல்சூழ் கழிக்கானல்
போயிரவிற் பேயோடும் புறங்காட்டிற் புரிந்தழகார்
தீயெரிகை மகிழ்ந்தாருந் திருவேட்டக் குடியாரே.
|
2 |
தோத்திரமா மணலிலிங்கந் தொடங்கியஆன் நிரையிற்பால்
பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே.
|
3 |
கலவஞ்சேர் கழிக்கானல் கதிர்முத்தங் கலந்தெங்கும்
அலவஞ்சேர் அணைவாரிக் கொணர்ந்தெறியும் அகன்றுறைவாய்
நிவலஞ்சேர் நுண்ணிடைய நேரிழையா ளவளோடுந்
திலகஞ்சேர் நெற்றியினார் திருவேட்டக் குடியாரே.
|
4 |
பங்கமார் கடலலறப் பருவரையோ டரவுழலச்
செங்கண்மால் கடையஎழு நஞ்சருந்துஞ் சிவமூர்த்தி
அங்கம்நான் மறைநால்வர்க் கறம்பொருளின் பயனளித்த
திங்கள்சேர் சடையாருந் திருவேட்டக் குடியாரே.
|
5 |
நாவாய பிறைச்சென்னி நலந்திகழு மிலங்கிப்பி
கோவாத நித்திலங்கள் கொணர்ந்தெறியுங் குளிர்கானல்
ஏவாரும் வெஞ்சிலையால் எயின்மூன்றும் எரிசெய்த
தேவாதி தேவனார் திருவேட்டக் குடியாரே.
|
6 |
பானிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்குருகு
கானிலவு மலர்ப்பொய்கைக் கைதல்சூழ் கழிக்கானல்
மானின்விழி மலைமகளோ டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத் திருவேட்டக் குடியாரே.
|
7 |
துறையுலவு கடலோதஞ் சுரிசங்க மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை நன்னீழற் கீழமரும்
இறைபயிலும் இராவணன்றன் தலைபத்தும் இருபதுதோள்
திறலழிய அடர்த்தாருந் திருவேட்டக் குடியாரே.
|
8 |
அருமறைநான் முகத்தானும் அகலிடம்நீ ரேற்றானும்
இருவருமாய் அளப்பரிய எரியுருவாய் நீண்டபிரான்
வருபுனலின் மணியுந்தி மறிதிரையார் சுடர்ப்பவளத்
திருவுருவில் வெண்ணீற்றார் திருவேட்டக் குடியாரே.
|
9 |
இகழ்ந்துரைக்குஞ் சமணர்களும் இடும்போர்வைச் சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற் கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலின் நிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார் திருவேட்டக் குடியாரே.
|
10 |
தெண்டிரைசேர் வயலுடுத்த திருவேட்டக் குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூல் இவைபத்தும் உணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ டுயர்வானத் திருப்பாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |